Thursday, February 18, 2010

நரகத்தின் கதை (உண்மைக்கதை)


எங்கும் அமைதியுடன் கூடிய மயானக்காட்ச்சி,ஆனால் ஏதிலிகள்ஆக்கப்பட்ட மக்கள், நடைப்பிணங்களாக நடமடுகின்றனர். நடக்கப்போவதை அறியாத சிறுவர்களின் ஆரவாரம்,பளுதடைந்த உணவைப் பெறுவதற்க்காக முந்தியடித்து ஓடிச்செல்லும் பலர்.அழகுகள் அசிங்கங்களாக, சதா உளைத்த கரங்களெல்லாம் நீண்ட ஓய்வுக்குள்.பாண் போறணையை ஒத்த இந்த தரப்பால் கொட்டிலால் நோட்டமிடுகிறான் சுரேஸ். தூரத்தே முட்க்கம்பிச்சுருள்கள் அருகருகே படையினர், அவசரமாக நீழக்காற்சட்டையைஅணிந்த சுரேஸ், தன்னிடமிருந்த கசங்கிய சாயம் பிரண்ட ஒரேயொரு சேட்டை திருப்பித்திருப்பிப் பார்த்தான். அந்தக் கழிவு வாய்க்காலில் மணிக்கணக்காக கழுத்தளவு தண்ணீருக்குள் நிற்க்கவைத்தே,அப்புறமாக இந்த முகாமுக்கு இராணுவம் சுரேசைக் கொண்டுவந்திருந்தனர்.அவனின் மேலங்கி கழுவியும், அழுக்குப் போகவில்லை. மனிதர்களே இறங்கியிராத மிருகங்கள் செத்து மிதந்த அந்த சேறு சுரி நிறைந்த கழிவு வாய்க்காலால் வந்த அநேகர்,செருப்பைக்கூட தொலைத்தே வந்தனர், இந்தக் கேவலத்துடன் திருமலையிலிருந்து தன்னைச் சந்திக்கவரும் வயோதிபரான தன் அன்னையை எதிர் கொள்வதில் சுரேஸ் மிகவும் சஞ்சலப்பட்டான். ஆம் அரச உத்தியோகத்தரான தன் மகனில் அவ்வளவு அன்பையும் மதிப்பையும்,கவனத்தையும் வைத்திருப்பவள் அவள். சாப்பாட்டின்றிக் கிடந்த உடல், சொறிசிரங்கு ஒருபக்கம் ,எல்லாவற்றையும் விட அம்மாவுக்கும் தனக்கும் இடையிலான அந்த முட்கம்பிவேலியை நினைக்கும்போது அவன் மனம் பேதலித்தது. இப்போது தள்ளாடியபடி நடக்கத் தொடங்கினான் .வெட்டவெளியில்,கொடியவெயிலில் பாதங்கள் வெந்து தொப்பளித்தது. மூன்று கிலோ மீற்றர் தூரம் நடந்த பின்பே அந்த முட்கம்பி வேலி வரும். .வழிகளில் ஒதுங்கிட நிழல்கள் மிகக் குறைவு,கொப்பளித்த கால்களுடன்,கெந்தியும் ஓடியும் சென்றான். தாளாத களைப்பு, நீண்ட வரிசையில் குடிநீருக்காக காத்து, இல்லை காய்ந்து நிற்க்கும் மக்களைப் பார்த்தவன் தனக்குள் சிந்திக்கலானான், காலடியில் சொந்தக் கிணறு, வழிந்தோடும் வாய்க்கால்கள்,எத்தனை குளங்கள்,நீண்ட பெரு மூச்சொன்றை விட்டவன் சேற்றுக்கு நடுவில் கிடந்து நாய்படாப் பாடுபடும் அந்தக் குளாய்க்கிணற்றடியில், சற்று நிற்கிறான். நிலத்திலிருந்த சிலர் தாழமல் எழுந்து நின்று அவனுக்கு ஏதோ மரியதை கொடுக்கின்றனர்.சிறிய பெண்பிள்ளை ஒன்று தனது றபர் யொக்கில் நீரைத்தந்து,மெதுவாக சேர் என்கிறாள்,சுயநினைவுக்கு வந்தவனாக நிமிர்ந்து பார்த்தவன், அது தன் மாணவி. இப்போது நீரைப் பருகியவன்,நன்றி கூறினான், அவளன்னையும் அவளும் அளுதவண்ணமிருந்தனர்.ஆம் அவளின் தந்தை வரும்வழியில் மாண்ட்கதை கேட்டவன், கண்ணீர் சிந்தியவனாக தொடர்ந்து நடந்தான். .அவன் சிந்தனையைப் போலவே கால்களும் த்ள்ளாடிச்செல்கின்றன.அடுத்ததாக வீதியின் வலது பக்கம் உலகத்தை பேய்க்காட்டும் மருத்துவமனை வருகிறது, இங்கு நோயளர் வரிசையில் நிற்கிறார், இருக்க்கிறார்,கிடக்கிறார். வரிசைகளுக்குப் போட்டிவைத்தால் முதலிடம் இதுதான் வரும், ஓ கடவுளே வெறும் தரையில் வருத்தக் காரர்களெல்லாம் இயலாமல் படுத்துக் கிடக்கின்றனர்.குழந்தைகள் கற்ப்பவதிகள் வயோதிபர்கள்,இலையான்கள் கும்பலாக மொய்க்கின்றது, வழியில் இவற்றையெல்லாம் பார்த்தவனுக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது, இப்பகூடதனது தோற்றம் ஒரு மனனிலை பாதிக்கப்பட்டவனைப் போன்றுள்ள்தைக் கண்டு தனக்குள் சிரித்தவனாகச் செல்கிறான்,வாழ்வே முடிந்து போன மனநிலை, உத்தியோகம் வீடு என்றிராமல் ஒவ்வொரு மணித்துளியையும் கடின உழைப்புக்குள் ஈடுபடுத்தியவன் சுரேஸ். பள்ளிகூடம், பாட ஆயத்தம் தவிர்ந்த நேரங்களில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு, சம்பாதித்த முழுவதையும் நிலத்திலும் விவசாய உபகரணங்களிலும் முதலிட்டிருந்தான்.கழைத்து உழைத்ததெல்லாம் முள்ளிவாய்க்கால் கடற்கரையில்.யாருக்குத் தெரியும் இந்தளவு சீரளிவு வருமென்று, ஒரேயொரு ரோச்லைட் மட்டும் கையில் கொண்டுவந்தும் அதைக் கூட பறித்தெடுத்த புண்ணியவான்கள் விட்டுவந்ததையா தரப்போறான்கள்,ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பியவன் நாற்றம் தாழாமல் மூக்கைப் பொத்தினான், மதியவெயிலிலும் மலசலம் கழிப்பதற்கு வரிசையில் காத்திருக்கும் உறவுகளைப் பார்த்து ,கடவுளே ஏன் இந்தக்கொடுமை என்றவன்,உண்மையில் சமரசம் உலாவும் இடம் இதுவோ என்றெண்ணினான்.காரணம் எல்லோரும் வரிசையில்,அநேகமாக ஓரிரு நாட்களில் குழிகள் நிரம்பிவழிவதால், அப்பகுதியே நாற்றமெடுக்கும். அத்துடன் கழிவறையின் உட்சென்றால் பலஅறைகளில் வெள்ளை நிற மாபிள் கோப்பை முளுவதும், மலம் நிரம்பி சிலவேளைகளில் பாதம் வைக்கும் இடத்திலும் அது பரவியிருக்கும்.உண்மையில் இறப்பதற்கு முன்னமே இம் மக்கள்னர் நரகத்தைப் பார்த்துவிட்டனர் .பத்துக் கழிவறையில் ஐந்துக்கு கதவிருக்காது, அடக்கமுடியாத மலத்தைக் கழிப்பதற்கு அந்தக் கதவில்லாக் கழிவு(நரக)அறைக்குள் நுளைந்ததும் வரிசையில் அடுத்ததாக நிற்க்கும் நபர் அல்லது உறவினர், வாயில் பகுதியை தகரத்தால் சாத்திப் பிடித்திருப்பார். அந்தத் தகரம் முடிவிலியாகக் கைமாறிச் செல்லும், அதுவொரு தொடர் கதை. வழியில் உணவு வழங்கும் வாகனமொன்றுநிற்கிறது ,பெரும் கூச்சல் குளப்பம் மெதுவாகப் பார்க்கிறான், அநேகமான பெண்களின் நாரிகளில் சிறு பிள்ளைகள், ஆனாலும் வரிசைதான் அவன் முன்னுரிமைகொடுத்தாலும் நம்மடையள் விடாதுகள்,வயோதிபர் ஒருவர் வரிசையைக் குளப்பி முன்னுக்குச் சென்று விட்டதால் தான் இவ்வளவு கூச்சலும் ,பாவம் அந்த மனுசன் மெலிவதற்கு இனியிடமில்லை.பசிதாங்காமல் முன்னுக்குப் போயிற்றார் போலும் ஆனால் சனம் குழம்பிட்டுதுகள்,மனச்சாட்சியுள்ளயாரோ ஒருவர் அவருக்காக வாதாட முற்பட்டாலும் வெல்லமுடியவிலைப் போலும் வயோதிபர்கடைசி வரிசைக்கு போகின்றார் நமது ஒற்றுமையை எண்ணிய இவ்வளவு பட்டும் நாங்கள் திருந்திடவில்லை என தனக்குள் முணுமுணுத் சென்றான்.ஆனால்மறுநிமிடமே சிந்தித்தான்,பாரியபிரதேசமான வன்னியில்,பல்வேறுஇடங்களில் பலதரப்பட்ட சூழலில்வாழ்ந்த முழுப்பேரும் ஒரேபகுதியில் அடைபட்டிருந்ததால் பல்வேறு பிரச்சனைகட்கும் மன உழைச்சல்களுக்குமெல்லோருமே அந்தௌட்பட்டிருந்தனர். இதனால் சுகாதாரப்பிரச்சனைகள் மிக மிகமோசமாக இருக்கிறது,இதைப் போன்றே மற்றவைகளும். இந்தக் காட்ச்சிகளினூடே அவன் கால்களும் நடந்ததால்,உறவினர் சந்திப்பிடத்தை வந்தடைந்தான்,இன்று என்றுமில்லாதவாறு முட்கம்பியைத் தள்ளியவாறு முகாம்மக்கள், நீண்டகாலமாக இங்கு தங்கியிருப்பவரான ஒருவரிடம் காரணத்தை மெதுவாக வினாவினான். இன்று வெசாக்பண்டிகை என்பதனால் சிலவேளை பார்க்கவருபவர்களை சாப்பாட்டுச் சாமான் கொண்டுவர விடல்லாம் என்ற நம்பிக்கையில தான் ஆட்கள் நிறைய வருகினம் என்றார், நம்பிக்கையுடன். இதுவெறும் நப்பாசையென்றான் சுரேஸ் , இல்லை சிலவேளை இப்ப அவர்கள் மனம்மாறியிருக்கலாம் தானே என்று பெரியவர்கூறியதும், இருவரும் மெதுவாகச் சிரித்தனர்.சரி பொறுத்திருந்து பார்ப்போம் என்றவன் கடவுளே என்று அப்படி நடந்தால் கனநாளைக்குப் பிறகு பளுதடையாத சாப்பாடு அதுவும் அம்மா கையால் சமையல் அவனுக்கு வாய் ஊறியது, மாதக்கணக்கில் செருப்பிலாமல் தொப்பளித்த கால்களுக்கும் பாதணி கிடைத்து விடுமென எண்ணியவனாக வரும் வழி நோக்கினான். ஆம் இப்போது தூரத்தே உறவினர்கள் ஓடியும் விரைவாக நடந்தும் வருகின்றனர் சுவாமிக்குத் தீப ஆராதனை செய்யும் போது சைவபக்தர்கள் எங்கனம் பக்திப் பரவசத்தால் சுவாமியைப் பார்க்க முண்டியடிப்பார்களோ அதைப் போன்று அக் காட்ச்சியமைந்தது. சுரேஸ் நுணிக்காலில் தானும் எட்டிப் பார்த்தான்,இந்தச்சுற்றில் அம்மா வரவில்லை,மணிக்கணக்கில் காத்துக்கிடந்து வந்தவர்களும்,முட்கம்பிச்சிறைக்குள் உள்ளவர்களும்,அழும் காட்ச்சிவானைப் பிளந்தது. ஆம் அநேகமாக எல்லா வீடுகளிலும் இறப்பு நடந்ததால் இழவு வீடு கொண்டாடுமிடமாகஇந்த முட்கம்பி வேலியே மாறிவிட்டிருந்தது.சிலர் கட்டியணைத்து அழ முயற்ச்சித்து முகத்தில் முட்க்கம்பி கிளித்த்து,இரத்தம் வடிகிறது. சகிக்கமுடியாத அவலமிது, வழங்கப்பட்ட வெறும் அரை மணி நேரம் முடிவடைந்ததால் சிலர் அழுதழுது போகின்றனர்.அந்தத்தருணத்தில் ஒரு பெண் தன் இடையில் மறைத்து உடுத்திவந்த கறுப்புநிற உட்பாவாடை ஒன்றை,இமை மூடும் கணப்பொழுதில் களட்டியவள், முட்கம்பிக்குள் நின்றபெண்ணிடம்,வழங்கிவிட்டு பயந்தவண்ணம்வெளியேறினாள், சடுதியாகத் தன் கண்ணில் பட்ட இச்சம்பவம், அவனின் மனதை உலுப்பியது. தன் உறவுக்குத் தேவைப்படும் உள்ளாடை ஒன்றைக்கூட கொடுக்க முடியாதளவுக்கு நிலமையுண்டென்றால் இதை என்னவென்று சொல்வது. சிறைச்சாலையை விட மிக மோசமான நிலமைதான். திடீரெனஅவன் மனம் சஞ்சலப்பட்டது, ஆம் பொருட்கள் எவையும் இன்று அனுமதிக்கப் படாததை வாடிய முகங்களும் வெறும்கைகளும் உணர்த்தியது. வெசாக் கதை சொன்ன பெரியவரின் முகத்தைப் நோக்கினான், வாடிய வதனமாய் திரும்பிச் செல்கிறார்,எந்தப்பொருட்களும் வரப்போவதில்லை என்பது தெளிவாகியது. ஆனால் தன் அன்னையைக் காணும் ஆவலில் சுரேஸ் காத்திருந்தான். அடுத்த பார்வையாளர்கள் விரைந்து வருகின்றனர். ஆவல் மேலிட அம்மாவை அண்ணார்ந்து தேடுகின்றான், ஏமாற்றம் தான் இந்த முறையிலும் வரவில்லை,ஆனால் தங்கள் தூரத்து உறவினர் ஒருவர் வருவதைக் கண்டவன் சைகை செய்து அவரைச் சந்தித்தான் தன் தாய் மறுமுனையில் தன்னைப் பார்ப்பாதற்கு மிக ஆவலுடன் நிற்ப்பதாகச் சொன்னதும், அவன் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.வந்தவரோ தம் உறவுகளைத் தேடினார், அவர்கள் இங்கு வந்திருக்கவில்லை, காரணம் இந்தப்பெரிய முகாமில் ஓரிரு பகுதிகளில் மட்டும் கட்டப்பட்ட ஒலிபெருக்கிமூலம் அறிவிப்பது எல்லோருக்கும் கேட்பதிலை, இதுவே உண்மை. கூட்டுக்குள் அகப்பட்ட எலியைப் போல, பாவம் அங்கும் இங்கும் அலைந்தவர், இறுதியில் சுரேசிடம் வந்தவர் எஞ்சிய பத்துநிமிடத்தில் ஒன்றுமே செய்ய முடியாதென்பதை உணர்தவராக,தான் கொண்டுவந்த பொருட்களை எவ்வளவு கெஞ்சியும் படையினர் அனுமதிக்கவில்லை என்றும், கணவன் இறந்த தன் சகோதரி பிள்ளைகளைக் கூட பார்க்க முடியமல் போய்விட்டதே என மனமுடைந்தவராகப் புறப்பட்டார். அம்மாவிடம் என்ன சொல்ல என்றவரிடம் இப்ப வந்தவர்கள் போனதும் அம்மா அடுத்ததாக வந்திடுவார் நான் சந்தித்திடுவேன் தானே நீங்கள் சொன்னவைகளை உங்கள் சகோதரிக்குச் சொல்கிறேன், என வழியனுப்பினான். இப்போது முட்கம்பியுடன் ஒட்டிநின்றளும் ஒரு குடும்பத்தைப் பர்ர்த்தவன் தன் கவனத்தை அதில் செலுத்தலானான்,எறிகணை வீழ்ந்து மாண்டுபோன தன் மகனின்,பிள்ளைகளையும் மருமகளையும் பார்க்க வந்திருக்கும் அந்த வயோதிப அம்மம்மா தான் கொண்டுவந்த சிறிய குடைக்குள்ளிருந்து படையினருக்குத் தெரியாமல் ஒழித்துக் கொண்டுவந்த மூன்றுவடையினை மெதுவாக வெளியில் எடுக்கின்றார்.இழவுவீடு நடந்ததற்கு அறிகுறியாக அனைவரின் கன்னங்களும் கண்ணீர் வடிந்த காட்ச்சி,கீழே நிற்கின்ற பிள்ளையிடம் ஒன்றும் தன் கடைசித் தம்பியை நாரியில் தூக்கி வைத்திருக்கும் மூத்த குமர்ப்பிள்ளையிடம் ஒன்றும், மீதியான ஒன்றை கடைசிப்பிள்ளையிடம் கொடுத்தார். முட்கம்பியால் கையை நீட்டிப்பெற்ற பிள்ளை தன் கையை உள் இழுத்த வேளை எதிர்பாராதவிதமாக கை முட்கம்பியில் பட்டதால் அந்த வடைநிலத்தில் விழுந்து விட்டது. பிள்ளையோ அழத்தொடங்கியது, இரண்டாவது பிள்ளையோ தன் வடையை உடனும் சாப்பிட்டு விட்டது,மூத்த பிள்ளையின் கையில் பாதி மட்டும் மீதியாக இருந்ததால் வேறு வழியின்றி கீழே விழுந்ததை எடுக்க அம்மம்மா குனிந்தபோது, அது ஊத்தை எடுக்கவேண்டாமென்று பல குரல்கள் தடுத்ததால், மூத்தபிள்ளை எஞ்சிய பாதி வடையை பிள்ளையிடம் கொடுத்தது. பிள்ளையின் அழுகை அடங்கியது.ஆனால் அந்த அம்மம்மா கத்தத் தொடங்கினார்.அறுவானுகள்... துலைவானுகள்... இதுவாடா உங்கட வெசாக்கு?... நான் கொண்டுவந்ததெல்லாம் புடுங்கிப் போட்டு விட்ட அறுவான்கள்... ந்ல்லாயிருக்க மாட்டான்கள்.., அப்பாவியான என்ர பிள்ளையை செல்லடிச்சுக் கொண்டதும் பத்தாமல்,அவன்ர குஞ்சுகளையும் கொல்லுறத்துகாடா முள்ளுக்கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கிறாய்? இதுவரை தங்கள் தங்கள் குடும்பங்களுக்காக அழுதவர்கள் இப்போது இந்தக் குடும்பத்திற்காகவும் சேர்த்து, ஏன் தமது விதியை எண்ணி அழுதனர். மொழிதெரியாத சிப்பாய் ஒருவன் கையில் தடியுடன் ஆனால் மணிக்கூட்டைக் காட்டி பார்க்க வந்தவர்களை உடன் திரும்புமாறு சத்தம் போட்டு இப்பகுதி நோக்கி விரைவாக வருவதைக் கண்டவர்கள்,திரும்பிச் செல்கின்றனர். எவரையும் பொருட்படுத்தாத அந்த வயோதிப மாதுவின் குரல் மட்டும் போகும் வழியெங்கும் ஒலித்துச் செல்கிறது. ஆம் முட்கம்பிக்குள்ளிருக்கும் எம்மக்கள் ஊமைகளாய் மாறி தம் மனசுக்குள் நாளும் திட்டுவதை இன்று வெளியில் கேட்க்கும் போது ஒருவித சந்தோசம்தான், அந்த சந்தோசம் கூட நீடிக்கவில்லை, காரணம் அந்த ஒலிபெருக்கி அறிவிப்பு "தவிர்க்க முடியாத காரணமாக உறவினர் சந்திப்பு இத்துடன் நிறுத்தப்படுகிறது."சுரேசின் மனம் சுகுக்குநூறானது, திருமலையிலிருந்து பிரயாணம் செய்த தன் வயோதிப அம்மாவின் மனநிலையை, அலக்களிப்யை, நினைந்து, ஏமாந்து திரும்பும் பலருடன் சுரேசின் கால்களும் தள்ளாடி நடந்தது, செட்டிக்குளக் காட்டின் கொடிய வெயிலில் கால்கள் தொப்பளங்களாவதை அவனறியாது பாதைதெரியாப் பாலகன் போல் ஏதோ பிணமாய் போகின்றான்.

No comments:

Post a Comment

yasmin lawsuit