Saturday, March 13, 2010

உயிர் காத்த உயிர் மரங்கள்




மனிதனை மனிதன் மரமெனத்திட்டுவான்

உணர்ந்தும் புரிந்தும் மறுபடி திட்டுவான்

மாஜம் மனிதனே மரித்திடும் உடலமே

மரமது மேலடா உன் மனதிலும் உயர்வடா

உன் கண்களை மூடி மூச்சினை இழுத்து

மனதினை திறந்து ஒரு முறை பார்

ஒருவனை ஒருவன் ஒழித்திட நினைப்பான்

வன்முறை தூக்கி வாழ்வினை அழிப்பான்

முந்தினோன் வாழ்வான் பிந்தினோன் வீழ்வான்

சமனிலை குழப்பி சாவினைக் கொடுப்பான்


உன் ஒவ்வொரு மூச்சும் மரத்தின் பிச்சை

மரங்களின் நன்மை புரிந்துவிடு

இயற்கையின் அன்பு தெரிந்துவிடும்-உன்

முந்தையர் முகத்தினை கண்டறிவாயோ

அறியேன் என்பாய் ஆவலில் துடிப்பாய்

முற்றத்தின் நடுவில் வேம்பினைப் பார்

வயலோர வெளிகளில் பனைகளைப் பார்

அம்மன் கோவிலின் ஆலினைப்பார்

ஆண்டவர் கோவிலின் மரங்களைப் பார்

ஆச்சியின் கோடிப் புளியினைப் பார்-நம்

முந்தையர் நட்டவை நிமிர்ந்து நிற்பவை

அத்தனை மரமும் முந்தையர் முகமே


உவர் நீரை ஊற்றினும்-அதை

இளநீராய் தரும் மனம்-நாம்

புசிக்கக் கனியாய் கடிக்கக் காயாய்

குடிக்கப் பாகாய் படுக்கப் பாயாய்

வசிக்க வீடாய் வாழ நிழலாய்

நோய் தீர்க்க அரு மருந்தாய் -எத்தனை

நூற்றாண்டாய் நிழலாயகி நின்றிடுவாய்

அழகு தேவதையே மயக்கும் பூமணமே

ஆயிரம் ஏசிகள் அவனியில் வந்தாலும்

ஆலுக்கும் வேம்க்கும் அது ஈடாகுமோ


வெட்ட வெளியிலே குண்டு மழையிலே

நித்தம் நனைந்தவர் நிர்மூலமானவர்

கத்தி மடிந்தவர் கத்தாமல் மாண்வர்

அக்கம் பக்க அல்லோலம் பார்த்து

தன்னுயிர் காத்திட மனிதரோ ஓடினார்

காலை நின்றவர் மாலை மாறினார்

மாலை நின்றவர் காலை வாரினார்

அன்பு மரங்களே அசையாமல் நின்றீர்

நெஞ்சில் ரவையேந்தி உடலில் கணையேந்தி

போராளிமனமாகி தியாகங்கள் புரிந்திட்டாய்

உயிர் காத்த உயிர் மரமே -பச்சையாய்

உனைத் தறிக்க மனமில்லை கண்கணியே

முட்டியுடன் வீழ்த்தினோமே பெண்மணியை

பாளைக்கு பொன்போட்டுப் பொங்கலிட்டு -அது

இளநீராய் ஆகுமுன்பே கண்ணீரைப் பரிசளித்தோம்

அழுதழுது உனைத் தறித்து-நாம்

அதனால்த்தான் உயிர் பிழைத்தோம்

யேசுவுக்கு நீ சிலுவை

எங்களுக்கு நீ யேசு

கட்டியணத்து முத்தமிட நீயில்லை

இயற்கையும் இறைவன் தான்

கடவுளின் சாயல் தான்

கோழியின் இறக்கைகள்-என்றும்

குஞ்சுக்கு காப்பாகும்

மரங்களின் உடல்களே

எங்களின் உயிர் காப்பு

பனை மரமே பனைமரமே நீயெங்கே

உயிர் காத்த உயிர் மரமே நீயெங்கே

எமை மூடி நீகிடந்தாய் -நன்றியம்மா

கணையேந்தி உடல் பிளந்தாய் நன்றியம்மா

எமைக்காத்து நீ மரித்தாய் நன்றியம்மா

இது கவியல்ல கவியல்ல

கண்ணீரின் ஓர் கோரல்

ஊரெங்கும் மரம் நடுவோம்

உணர்வோடு வளர்த்தெடுப்போம்

2 comments:

மதுரை சரவணன் said...

ஊரெங்கும் மரம் நடுவோம். வாழ்த்துக்கள்

வான்முகில் said...

மதுரை சரவணன் அவர்களே தங்கள் கருத்துக்கு எனது நன்றிகள்

Post a Comment

yasmin lawsuit